மின்சார ரயில் சேவை ரத்து...நாளை கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கம்
தாம்பரம் - கடற்கரை இடையே நாளை காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் இரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் இரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.