மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

 
சென்னை உயர்நீதிமன்றம்

மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கலப்பு திருமண சான்றிதழ் வழங்கக்கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மேட்டூரில் வசிக்கும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ், அருந்ததியர்  சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வைத்திருக்கும் அவர், தனக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழை வழங்கக்கோரி விண்ணப்பித்திருக்கிறார்.

1

அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்று வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் ஒருவர் மதம் மாறுவதால் அவருடைய சாதி மாறுவதில்லை எனவும், 'மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு மணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்' எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.