#BREAKING அன்புமணி மீது பாய்ந்தது வழக்கு!
நெல்லை சிந்து பூந்துறையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி உரிமையை மீட்க தலைமுறையை காக்க என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அக்டோபர் 7ம் தேதி நெல்லைக்கு வருகை புரிந்தார். அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுகள் நேரடியாக தாமிரபரணி நதியில் சிந்து பூந்துறை என்று சொல்லக்கூடிய பகுதியில் கலக்கிறது. இதை பார்வையிடுவதற்காகவும், அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்காக ஒரு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த நெல்லை பாமகவினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் இதற்கு பாமகவினர் முறையாக காவல் துறையில் அனுமதி பெறவில்லை என்பதால் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இருந்த போதிலும் பாமகவினர் பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மாநகர காவல் துறையினர் அந்த இடத்தில் குவிந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தடுத்தனர்.
சிறிது நேரத்தில் நெல்லை மாவட்ட பாமக நிர்வாகிகள் மாநகர காவல் துறையில் பாமக அன்புமணி சிந்து பூந்துறை பகுதியில் கழிவுநீர் கலப்பதை பார்வையிடுவதற்காக அனுமதி வழங்க வேண்டும் என அனுமதி கடிதத்தை கொடுத்து அனுமதியை பெற்றனர். அன்புமணியும் சிந்து பூந்துறை பகுதியில் வந்து தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினரை திரட்டி அனுமதி இன்றி தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பி திடீரென ஒரு ஆர்ப்பாட்டத்தை அன்புமணி நடத்தினார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் எதிர்பாராமல் அதிர்ச்சியில் திகைத்தனர். அதனைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காவல்துறையில் முறையாக அனுமதி பெறாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நெல்லை ஜங்ஷன் காவல்துறையினர் பாமக தலைவர் அன்புமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். தொடர்ந்து பாமக தலைவர் அன்பு மணிக்கு மாநகர காவல் துறையினர் சம்மன் அனுப்பி விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளனர். இத்தனை நாட்களாக இந்த வழக்கு பதிவு செய்த விவகாரத்தை காவல்துறையினர் வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


