கார் பேட்டரியில் இருந்து பாய்ந்த மின்சாரம்- நொடியில் மரணித்த கார் மெக்கானிக்

 
கார் மெக்கானிக்

ஆம்பூர் அருகே கார் பழுது பார்க்கும் சென்டரில் பணிபுரிந்து கொண்டிருந்த கார் மெக்கானிக் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் குடியாத்தம் நத்தம் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் என்பவருக்கு சொந்தமான காயத்ரி ஆட்டோ கேரேஜ் (மெக்கானிக் வாட்டர் சர்வீஸ் சென்டரில்) செயல்பாட்டு வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் சுதாகர்(24) ஆகிய இருவரும்  கடந்த ஆறு மாத காலமாக மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சுதாகர் பணிக்குச் சென்று கார் பழுது பார்க்கும் பணிகள் செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணி அளவில் கார் ஒன்றை வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது  திடீரென மயங்கி விழுந்து சுதாகர் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.