"குழந்தைக்கு கால் வராம போயிடுச்சினு ஹாஸ்பிடல்ல சேத்தோம்.. இப்ப உயிரே போய்டுச்சு"- ஜிபிஎஸ் நோயால் சிறுவன் பலி

 
ச்

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ,தொடர்ந்து  ஜி.பி.எஸ் நோய்  தொற்றால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது  

திருவள்ளூர் அடுத்த  திருவூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பிரேம்குமாரின மகன் பி.மைத்தீஸ்வரன் (9). இவர் அப்பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்தார். சிறுவனுக்கு கடந்த ஜனவரி 22 ந் தேதி  அன்று பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு  இரண்டு கால்களும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர் பெற்றோர்கள்  வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நடை பயிற்சி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு நடை பயிற்சி சென்ற சிறுவன் இரண்டு கால்களும் செயலிழப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்னர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சில இளைஞர்கள் வீட்டிற்கு தகவல் அளித்து அவர் தந்தை வரவைத்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அச்சிறுவன் வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மாத்திரைகள் அளிக்கப்பட்டு  வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்குச் சென்று அச்சிறுவன் இரண்டு கால்களும் செயலிழந்ததால் நடக்க முடியாமல் தவித்துள்ளார். பின்னர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்று இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரத்த மாதிரி சிறுநீர் மாதிரி போன்ற சிகிச்சைக்கான பரிசோதனை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

அத்தகைய சோதனைகள் அவருக்கு ஜி.பி.எஸ் என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று பரவி உள்ளதை கண்டறிந்துள்ளனர். அங்கு நாளுக்கு நாள் அவர் கை கால்கள் உடல் உறுப்புகள் முழுவதும் செயலிழந்துள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரின் பெற்றோர், மருத்துவமனையில் விசாரித்த போது அவருக்கு புதியதாக உருவாகியுள்ள ஜி.பி.எஸ் தொற்று பரவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாட்டில் மகாராஷ்டிரா ,மேற்கு வங்காளம் , மாநிலத்தில் ஜி.பி.எஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் அதில் சிலர் மரணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் அத்தகைய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.