“எனது பெயரில் நற்பணி மன்றம்... எனக்கு உடன்பாடு இல்லை”- அண்ணாமலை
அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. தயவுசெய்து என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகளை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றம் தொடக்கப்பட்டுள்ளது. மேலும் மன்றத்துக்கான கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


