#BIG NEWS : எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து..!
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றுவதற்காக வெளிநாட்டினருக்கு எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கு இந்த விசாவினைப் பெரிதும் நம்பியுள்ளன. புதிய விண்ணப்பதாரர்களுக்குக் ட்ரம்ப் அரசு சில மாற்றங்களைப் புகுத்தியது.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்-1பி விசா கட்டணத்தை, சுமார் 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தி ட்ரம்ப் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்தக் கடுமையான விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, அமெரிக்காவின் 20 மாகாண அரசுகள் சார்பில் மாசச்சூசெட்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் கூட்டாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின் போது பல்வேறு சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கை முழுமையாக விசாரித்த மாசச்சூசெட்ஸ் நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"அமெரிக்க நாடாளுமன்றப் பேரவையின் (US Congress) முறையான அனுமதியின்றி, அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதிபருக்கு அத்தகைய பிரத்யேக அதிகாரத்தை நாடாளுமன்றப் பேரவை வழங்கவில்லை என்பதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்திய அரசின் இந்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது."
கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்-1பி விசா கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களின்படி, இந்த 1 லட்சம் டாலர் விசா கட்டணத்தை அமெரிக்கா முழுவதும் வெறும் 85 பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.இத்தகைய தளர்ச்சியான சூழலில் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

