சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சு- உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்

சனாதன தர்மத்துக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு வழக்குகளும் வேறு வேறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ளதால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைப்பு ஒரே இடத்தில் விசாரிக்க உத்தரவிடக்கோரி உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் பரமேஸ் என்ற நபர் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்திய வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு எதிராக வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுகூர் ராமலிங்கம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தடை கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித் இந்த வழக்கில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை நீதிபதி சரவணா முன்பு ஆஜரானார். அப்பொழுது உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவருக்கு ஜாமின் வழங்க கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உதயநிதிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும் ஜாமின் மனுவுடன் இந்த வழக்கில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரி உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கு தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் மனு மீது விசாரணை முடிந்த பிறகு இந்த மனு மீது தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.