கிறிஸ்தவ மிஷனரி விஜய்யை முதல்வராக முயற்சி- அர்ஜூன் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய் பனையூரில் இருந்து ஒர்க் ப்ரம் ஹோம் அரசியலை நடத்தி வருவதாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பிரிவினைவாதி என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டமாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கிருஷ்ணர் கோவில் அகற்றிய இடத்தில் அருகாமையில் பொதுமக்கள் ஒன்று கூடி விலைக்கு வாங்கிய இடத்தில் புதிய கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், “மிடில் கிளாஸ் மாதவன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராம் தாக்கல் செய்து நாட்டில் உள்ள நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நாடு போற்றும் பட்ஜெட்டை வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பேட் கேர்ள் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும், அத்தகைய திரைப்படம் பிராமண வகுப்பைச் சேர்ந்த பெண் படிக்கும்போது காதலில் விழுவதும், காமத்தில் விழுவதும், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாகவும் காட்சிப்படுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அத்தகைய திரைப்படத்தை பாராட்டி பேசும் பா.ரஞ்சித், வெற்றிமாறன், விஜய் சேதுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
சீமான் குண்டு வச்ச பாபாவை அப்பா என்றும், காஷ்மீர் பிரிவினை வாதத்தை ஆதரித்தும் பேசி வருவதால் அவர் ஒரு பிரிவினைவாதி. ஜோசப் விஜய் ஒர்க் ப்ரம் ஹோம் இருந்து அரசியலை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷனரி விஜய்யை முதல்வராக முயற்சி மேற்கொண்டு வருகிறது. விஜயின் அரசியல் என்பது சினிமா படம் போல தான், அவர் இன்னொரு கமல்ஹாசன் போல அரசியலில் மாறுவார். ஒன்றிய அரசின் பட்ஜெட் பற்றி எல்லாம் பேசுவதற்கு விஜய்க்கும், அவருடைய ரசிகர்கள் தகுதி இல்லை. பாரதிய ஜனதா கட்சியில் மாவட்டத் தலைவர்களை நியமனம் செய்வதில் சில சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்” என்றார்.