“யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout"- தவெக அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த ஈபிஎஸ்

 
eps

அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

eps

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை செய்தி சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.  தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.


யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா முதல்வரே? அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா? அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல! ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.  உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.