“அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப்போகிறோம்”- விஷால்

தேர்தல் அரசியல் பயணம் குறித்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன் என நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “கோவிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணம் கிடைக்கும். மனதில் உள்ள பாரம் குறைவது போல் தோன்றும். இன்று அம்மனை தரிசிக்கும் பொழுது நேர்மறையான எண்ணம் உள்ளுக்குள் செல்வது போல் இருக்கும். ஏழை பெண் குழந்தைகளின் படிப்பு வசதிக்காக இன்று அம்மனை தரிசித்தேன். என் ஆரோக்கியம் பற்றி ஒருவரிடம், அவர் டாக்டரா கம்பவுண்டரா என்று கூட தெரியவில்லை அவரிடம் கேட்கிறார்கள். அடுத்தவர்களை பற்றி பேசுவது அநாகரீகம். படத்தை பற்றி பேசலாம் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசக்கூடாது. இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன படங்களை எடுப்பவர்கள் ஆலோசனை கேட்டு உள்ளே வாருங்கள். தயாரிப்பாளர்கள் வழிகாட்டுதலை வழங்க ஏற்பாடு செய்யலாம். சிறிய படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் உள்ளது.
தற்காப்பு என்பது மிக முக்கியம். சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப்போகிறோம். எனது அரசியல் பயணம் குறித்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன். திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது வருத்தமாக உள்ளது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சினிமா துறைக்கு நல்லது அறிவித்தால் பஸ் பிடித்து வந்தாவது நிதியமைச்சருக்கு நன்றி சொல்வோம்” என்றார்.