தங்கள் வாழ்த்தும், பாராட்டும் மனநிறைவை அளித்தன : திருமாவுக்கு நன்றி சொன்ன நடிகர் சூர்யா
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்த திரைப்படம் ஜெய்பீம். இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் , "புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று 'ஜெய்பீம்' திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள 'கலைநாயகன்' சூர்யா அவர்களையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலு அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்" என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு… @thirumaofficial #JaiBhim pic.twitter.com/WOaHkrCYJ3
— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2021
இந்நிலையில் நடிகர் சூர்யா திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், மதிப்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மனநிறைவை அளித்தன. மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் ,தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதைப் போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது, அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப் படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.