காரைக்கால் மாணவனுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை - புதுச்சேரி சுகாதார இயக்குநர்..
காரைக்காலில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன் படிப்பு, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் முதல் மாணவனாக இருந்து வந்துள்ளான். இதனால் அதே வகுப்பில் படித்து வந்த தனது மகளுக்கு போட்டியாக இருப்பதாக சக மாணவியின் தாயார் கருதியுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுவனின் உறவினர் கொடுத்ததாகச் சொல்லி வாட்ச்மேனிடம் அவர் கொடுத்துள்ளார். வாட்ச்மேனும் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த பால மணிகண்டனிடம் கொடுத்திருக்கிறார்.
அதனைக் குடித்த சிறுவன் வீட்டிற்குச் சென்ற சிறுவன் பலமுறை வாந்தி எடுத்துள்ளான். அத்துடன் மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பேரில் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியாவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பேரில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு அமைத்து. இந்தக்குழு மருத்துவமனையில் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நேற்று மருத்துவத்துறை இயக்குடரிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில், காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை என்றும், தெரிந்திருந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியாததால் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ளது. மேலும், காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்றும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தவறில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.