ராஜ்பவனில் பொங்கல் விழா - தமிழ்நாடு என்ற சொல்லை அழைப்பிதழில் தவிர்த்த ஆளுநர்!
தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய அவர் நேற்று சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறியது பெரும் பேசும் பொருளானது.
வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று ஆளுநர் உரையை தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு உரையை வாசிப்பார். அதன்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி நேற்று சட்டசபையில் திராவிட மாடல் மற்றும் பெரியார் ,அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டார். அத்துடன் தனது சொந்த கருத்துகளையும் அவையில் பதிவிட்டார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்த நிலையில் ஆளுநர் ரவி அச்சிடப்படாத வாசகங்கள் கூறியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனால் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.
இப்படியாக தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கருத்துக்களை பேசி வரும் நிலையில் தற்போது பொங்கல் திருவிழாவில் தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. தமிழ்நாடு அரசு இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்த அவர் மறுத்துள்ளார் . அத்துடன் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடாமல் தமிழக ஆளுநர் என்று பொங்கல் விழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.