தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தினகரன் கேள்வி!!
தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை எடுத்த மெல்ரோசா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளே புகுந்த தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை ஆபாசமாக திட்டியதுடன், கை ,கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது.தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.