இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட அனுமதிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலைமைச்சர் கடிதம்

 
cm letter

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட கோரி,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர்  நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக, 31-3-2022 அன்று தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 15-4-2022 அன்று மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசிஉரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு உதவிகளையும் தமிழ்நாடு வழங்குவதற்கு அரச ஒன்றிய தேவையான பொருட்களையும், அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

modi

இதற்கிடையில் இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  இன்று  ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சசுத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளதோடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும்   பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.