பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - ஜி.கே.வாசன் அறிவிப்பு

 
gk vasan

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் த.மா.கா சார்பில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திகுப்பம் கேட் ஜே.எப்.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற த.மா.கா கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது: தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் தலையில் பல்வேறு சுமைகளை சுமத்தி உள்ளனர். குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் ஆட்சியாளர்கள் சுமத்தி உள்ளனர். மேலும், தமிழகத்தில் குண்டு வெடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கோவை கார் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாகும். 

ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.  இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பால் விலை உயர்வு என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் த.மா.கா சார்பில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.