பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

 
supreme court

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தப்படாததால்,  ஐ.ஹெச். சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா  ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரித்து வருகிறது.   கடத்த ஏப்ரல் மாதம் அக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

Madras Court

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது.  நீதிபதி ஜவால் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,  ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் அவர்களுடைய வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் என்றும்,  மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் அவர்களை  அங்கேயே  தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார்.   

தமிழக அரசு

அதன்படி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதித்தும் , தமிழக அரசு மட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை  தொடர்ந்த ஐ.எச்.சேகர் என்பவருக்கும் நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற கூடிய தமிழக அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கும்  இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.