ராமஜெயம் கொலை - 3ஆம் நாளாக உண்மை கண்டறியும் சோதனை!!
கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் திருச்சி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ அதிகாரிகள் திணறினர். இதை தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், சிபிஐ விசாரணைக்கு உதவுவதற்காகவும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பி ஆக சிபிசிஐடியின் எஸ்பி ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டார் . பத்துக்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் அடங்கிய குழுவானது தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 12 பேரின் செல்போன் இணைப்புகள் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் , 12 ரவுடிகளையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கோரி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நான்கு பேரிடம் சுமார் 8 மணி நேரமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக கலைவாணன் , செந்தில், திலீப் ஆகியோரிடம் மயிலாப்பூரில் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் சென்னையில் மூன்றாவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை நடந்து வருகிறது. ரவுடிகள் சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா ஆகியோரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடக்கிறது.