பணம், புகழ் இருக்கிறது; ஆனால் சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை- ரஜினிகாந்த் உருக்கம்

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு பின் மேடையில் பேசிய ரஜினிகாந்த், “ஓம் குருவே சரணம். என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். இது பாராட்டா அல்லது திட்டா என எனக்கு தெரியவில்லை. எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படம் ராகவேந்திரா, பாபா திரைப்படம் தான். பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.
இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின் கிடைக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம், இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமல் நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும்.அறிவு என்றால் புத்தி, சிந்தனை. நீ யார்? எங்கிருந்து வந்தவன்? சாதி எல்லாம் சேர்ந்ததுதான் அறிவு. பணம், புகழ், பெயர் உச்சி , பெரிய பெரிய அரசியல் வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி, நிரந்தரம் கிடையாது என்றார்.