#BREAKING ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை!
ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ராஜேந்திர பாலாஜியை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமலில் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லை தாண்டி செல்லக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜாமின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தன்னுடைய சிகிச்சை முதல் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் வரை எதிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி நிபந்தனை ஜாமினை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம் விருதுநகர் மாவட்டத்தில் விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இருப்பினும் வெளி மாநிலங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தளர்வு அளிக்க கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அத்துடன் ராஜேந்திர பாலாஜி அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.