இளைஞர்கள் சமூக வலைதளத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்

 
tamilisai

இளைஞர்கள் சமூக வலைதளங்களை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 

புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளை மற்றும் ஈடன் பவர் குவாலிட்டி நிறுவனம் சாறில் உணவு அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி  கொள்ள வேண்டும். இளைஞர்கள் எப்போதும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை எப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை வாழ்வதற்காக தான். சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். பாதையில் இருக்கும் முட்களையும் கற்களையும் அகற்றி நமக்கான பாதையை உருவாக்கி நடக்க வேண்டும். உழைத்து வாழ்வில் உயர வேண்டும். உழைப்பை தவிர வேறு பாதை இல்லை. சமூக வலைதளத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும். தாய் தந்தையை மதிக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. இலக்கை குறிவைத்து பயணம் செய்ய வேண்டும். முயற்சி செய்து இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்