முதலமைச்சர் மீது செருப்பு வீசுவோம் என தெரிவித்த எம்.எல்.ஏ- வெடித்த போராட்டம்

 
protest

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குறித்து ஏனாம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அசோக் அவதூறாக பேசிய விவகாரத்தில், புதுச்சேரி முழுவதும் ரங்கசாமி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுயேட்சை எம்எல்ஏ சீனிவாஸ் அசோக்கின் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட ஏனாம் தொகுதியில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச அசோக் ஆதரவளித்து வருகிறார். மேலும் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு தான் வெற்றி பெற்றதால், தனது தொகுதி நலத்திட்டங்களை ரங்கசாமி புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஏனாம் கலை விழா இன்று தொடங்கியது. 8-ந் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக், “முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தால் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அதனை மீறி அவர் மீது காலணியை வீசுவோம்” எனக் கூறினார். இது புதுச்சேரியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்டித்து புதுச்சேரி கதிர்காமம் தொகுதிகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், எம்எல்ஏ சீனிவாஸ் அசோக்கின் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அங்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதே போல் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் என் ஆர் காங்கிரஸ் கட்சியினர், சுயேட்சை எம்எல்ஏ அசோக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கொறடா ஆறுமுகம் கூறுகையில், “ரங்கசாமி மீது அவதூறாக பேசிய ஏனாம் எம்எல்ஏவை வன்மையாக கண்டிக்கிறோம். பொதுமக்கள் கொதித்து எழுந்து உள்ளனர். ஏனாம் எம்எல்ஏ புதுச்சேரி வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்றார்.  இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து ஏனாம் தொகுதியில் அவரது ஆதரவாளர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.