தமிழை பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன தெரியும்? - பிரேமலதா கேள்வி

 
premalatha

தமிழை பற்றி  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநரின் தமிழ்நாடு குறித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதவது: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுநராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? ஆளுநரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது. மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை. 

முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.