ஜனவரி 16ல் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிப்பு..
வருகிற 16ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வழக்கமாக விடுமுறை விடப்படும் நாளான இன்று ( ஜனவரி 13) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக இன்று ( 13ஆம் தேதி) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி மாற்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது, ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள் 15, 16ம் ( ஞாயிறு மற்றும் திங்கள் ) தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.