தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு தேசிய கொடிகள்- பாஜக திட்டம்
தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு தேசிய கொடிகள் வழங்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது. பாஜக சார்பில் இந்த தேசிய கொடிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திர தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி என்கிற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் சுதந்திர தின விழாவில் ஈடுபடுத்த வேண்டும், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு தமிழக பாஜக சார்பில் தேசியகொடிகள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி ,சைக்கிள் பேரணி , நடை பயணம் நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினரின் சமூக வலைத்தளங்களில் தங்கள் முகப்பு பக்கமாக தேசியக்கொடியை அனைவரும் வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். இதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை வைத்துள்ளனர். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பிலும் தேசிய கொடி வைக்கப்பட்டிருக்கிறது.