"என்எல்சியில் தமிழர்களை புறக்கணிக்காமல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" - சசிகலா

 
sasikala

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்காமல் வேலை வாய்ப்பு வழங்கிட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எனகுறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலியில் உள்ள என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம் தற்போது புதிதாக தேர்வு செய்துள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனம் உருவாக்குவதற்கு, அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது தான். ஆனால், அப்படியான உறுதிமொழியை என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்திற்குரியது.

NLC

தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் தங்களுடைய தனித்துவமான திறமைககளால் எண்ணற்ற துறைகளில் சாதனைப் படைத்து இன்றைக்கும் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தை புறக்கணிப்பது என்பது இம்மண்ணின் இளம்தலைமுறையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் கருதப்படும்.

sasikala

தமிழகத்தின் அனைத்துவிதமான கட்டமைப்பு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு செயல்படுகின்ற இந்த நிறுவனமானது, இங்குள்ள தமிழக மக்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கும், அதனை விரிவாக்கம் செய்வதற்கும் தங்களுடைய நிலங்களை வழங்கியுள்ள குடும்பத்தினருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். எனவே, திமுக அரசு, தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.