மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம் .. மேலும் 2 நாள் அவகாசம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு..
மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் , மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்க்கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவிக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த உயர்கல்வி தொகை பெற தகுதி வாய்ந்த மாணவியர்களிடம் இருந்து ஆன்லைனின் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
முதலில் விண்ணப்பங்கள் பெற ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 நாட்கள் உதவித்தொகைக்காக பதிவு செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பபதிவு ஜூலை 10 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரை ரூ. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் இந்தத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் உதவித்தொகை விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மேலும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கி கணக்கு விவரங்களில் திருத்தம் இருப்பின் அதனை மேற்கொள்ளுதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக இந்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.