இளையராஜாவுக்கு நன்றி சொன்ன மோடி
இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை வழங்கி இருந்தார். அந்த அணிந்துரையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று சொல்லியிருந்தார். இது தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அம்பேத்கரை எப்படி மோடியுடன் ஒப்பிட்டு பேசலாம் என்று கொதித்தெழுந்தனர் திமுகவினரும் திமுக கூட்டணி கட்சியினரும். இளையராஜாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வீசி வந்தனர். இதனால் பாஜக தலைவர்கள் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக திமுகவினருக்கும் திமுக கூட்டணி கட்சியினருக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அந்த கருத்து சுதந்திரத்தை படி இளையராஜா தன் மனதில் பட்டதை சொல்லியிருக்கிறார். அது திமுகவிற்கு ஆதரவான கருத்தாக இல்லை என்பதால் எதிர்ப்பதா என்று கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் முருகன் , மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இளையராஜா குறித்து அவதூறாக விமர்சனம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தன்னை பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துள்ளார்.