எங்குமே மின்சாரம் நிறுத்தப்படவில்லை- செந்தில் பாலாஜி
இலவச மின்சாரத்திற்கு இந்த ஆண்டு ரூ.4000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையை பொருத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் மழையினால் பாதிக்கப்பட்டது. பின்னர் அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதில் மின் விநியோகம் 2 மணிநேரம் தடைபட்டு, பின் சரி செய்யப்பட்டது. கொஞ்சம் மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் கடந்த ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
3700-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தபட்டுள்ளது.
வழக்கமான புகார்கள் தவிர, மின்வெட்டு குறித்த புகார்கள் எதுவும் மின்னகத்திற்கு வரவில்லை. 11,200 மெக்காவாட் அளவுக்கு தான் நேற்று மின் தேவை ஏற்பட்டது. மழை காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது.
100 நாட்களுக்குள் 50,000 விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இலவச மின்சாரத்திற்கென, இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியம் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழைக்காலங்களில் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.