மின் கட்டணம் குறித்து தவறான தகவல் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.. வ்
மின்கட்டணம் மற்றும் மின்விநியோகம் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சமூக வலைதளங்களில் சில பதிவுகள் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதிமுக நிர்வாகி ஒருவர் தொடர்ந்து ஒரு மாதகாலமாக சமூக வலைதளத்தில் மின்னகத்திற்கு தொடர்பு கொண்டதாக கூறி வந்தார், ஆனால் அவரிடம் நான் உங்களது செல்போன் எண் கொடுங்கள் என்று கேட்டதற்கு அவர் கொடுக்கவில்லை. மாறாக சர்வீஸ் எண் மட்டும் கொடுத்தார் என்று கூறினார்.
அந்த சர்வீஸ் எண்ணை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில், அவர் 2 முறை மட்டுமே தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது என்றார். அப்போது அவரது புகாருக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஆனால் சமூக வலைதளங்களில் இல்லாத கட்டணத்தை இருப்பது போலவும், அதேபோல் விநியோகத்தில் பாதிப்பு இல்லாத இடங்களில் பாதிப்பு இருப்பது போலவும் சிலர் சொல்வதாக குறிப்பிட்டார். மேலும், இவ்வாறு கூறியவர் மீது மின்வாரியத்தில் இருந்து புகார் அளிக்குமாறு கேட்டுள்ளோம் எனவும், தவறான கருத்துக்களை வேண்டுமென்றே பரப்புவதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கான நிலை கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.