மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடன் வழங்க இலக்கு - அமைச்சர்

 
periyakaruppan

தமிழகத்தில் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25ஆயிரம்‌ கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர்  பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.  

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்  ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.இதன் பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்‌. அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.83 கோடி மதிப்பீட்டில் 203 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் உதவியினை வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு  மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப  செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.