ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

 
metro

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  பொங்கல் திருநாள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்குப் பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 18 ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்குப் பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். 2023 ஜனவரி 13, 14, 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் ஜனவரி 13, 14, 18 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டுமே. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.