நீதிபதிகள் சரமாரி கேள்வி.. திடீரென மயங்கி விழுந்த சுவாதி.. - கோகுல்ராஜ் வழக்கு விசாரணையின் போது பரபரப்பு..

 
 நீதிபதிகள் சரமாரி கேள்வி.. திடீரென மயங்கி விழுந்த ஸ்வாதி.. - கோகுல்ராஜ் வழக்கு விசாரணையின் போது பரபரப்பு..

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

 கடந்த 2015ம் ஆண்டு நாட்டையே  உலுக்கிய கோகுல் ராஜ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து வருகிறது.  இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி, பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.    அப்போது நீதிபதிகள், 2011-2015 வரையிலான கல்லூரி காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார்.

madurai high court

பின்னர்,  கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி கூறினார்.  அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த  கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர்.  பின்னர் அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.  அதற்கு ஸ்வாதி  அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்றும்,  யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறிவந்தார்.  

 நீதிபதிகள் சரமாரி கேள்வி.. திடீரென மயங்கி விழுந்த சுவாதி.. - கோகுல்ராஜ் வழக்கு விசாரணையின் போது பரபரப்பு..

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் மீண்டும் மீண்டும்  கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறினர்.  தொடர்ந்து அந்த வீடியோவில் இருப்பது நானில்லை, யாரென்று தெரியாது என்று கூறிவந்த ஸ்வாதி,  அப்போது நீதிமன்றத்தில் கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம் என்றும், ஆகையால்  நடந்த உண்மையை கூற வேண்டும் கேட்டனர்.  

பின்னர் சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தில் கோகுல்ராஜ் உடன் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தனர்.  மேலும், விசாரணையில் 15 நிமிடம் இடைவெளி விட்ட நீதிபதி, பகல் 1 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இடைவேளைக்குப் பின்  கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்த சுவாதி திடிரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சுவாதியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். நீண்ட நேரம் நின்று கேள்விகளுக்கு பதிலளித்ததால், கலைப்படைந்து மயக்கமடைந்திருக்கலாமென மருத்துவர்கள் தெரிவித்தனர்..