சென்னையில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல்.. மருத்துவமனையில் நிரம்பும் படுக்கைகள்..
தமிழகத்தில் சில வாரங்களாக ஃப்ளு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சென்னையில் H1N1 காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னர் பொதுவாக காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றுதான். மலேரியா, டெங்கு, ப்ளூ என இந்த ஆண்டில் குழந்தைகளுடைய காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சாதாரண காய்ச்சலை போல அல்லாமல் இப்போதைய காய்ச்சல் குறைந்தது 7 நாட்கள் வரை நீடிக்கிறது. இதனால் சில வாரங்கள் வரை கூட குழந்தைகளுக்கு சிகிச்சைகள் தொடர வேண்டிய நிலை உள்ளது. சென்னை, கடலூர், புதுச்சேரி, திருவாரூர் என பல மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 தளங்களைக் கொண்ட கட்டிடத்தின் பெரும் பகுதி காய்ச்சலுக்கானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு தளத்தில் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வரும் நிலையில், மற்ற 7 தளங்களுமே முழுவதும் காய்ச்சல் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. காய்ச்சலுக்காக மட்டும் எழும்பூர் மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அத்துடன் 150 பேஎ வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹச்1என்1 காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 25 கூடுதல் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்த போதிலும், மீண்டும் கல்வி நிலையங்கள் முழுமூச்சுடன் இயங்கி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது கலவலையளிப்பதாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குழந்தைகள் வீட்டிலேயே இருந்ததாலும் , பெரும்பாலும் அனைவரும் முககவசம் அணிந்திருந்ததாலும் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் செயல்பட தொடங்கியது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி நீடிக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து H1N1 பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து உறுதிசெய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.