ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா பேச்சு

 
h

இந்து மதத்தை இழிவு படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது எனவும், ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாதாவது: இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, தானாக உருவானது தான் இந்து மதம். கிருஷ்ணபரமாத்மா எதை கூறினாரோ அதைத்தான் திருவள்ளுவரும் கூறி இருக்கிறார்.இந்திய நாட்டில் தற்போது நடைமுறையில் இருப்பது அம்பேத்கர் வடிவமைத்த சட்டம்தான். ஆனால் நாட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் அல்ல, சனாதன தர்மம் தான். சனாதன தர்மம் தான் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருக்கிறது. அந்த சனாதன தர்மத்தை பற்றி பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆ.ராசா தவறாக பேசியுள்ளார். மேலும் இந்துகளுக்கு  கடவுள் பக்தி இருக்க கூடாது  என நினைப்பவர் தான் ஆ.ராசா. சனாதான தர்மத்தில் இந்துக்கள் சூத்திரர்கள் என்று கூறவே இல்லை. இதைப் பற்றி தொடர்ந்து ஆ.ராசா பொய்யாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெரியாரின் உலறல்களை வைத்துக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்துவதை தொடர்ந்து இனிமேலும் அனுமதிக்க முடியாது. எனவே காவல்துறை ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.