போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க முடியாதது அரசின் இயலாமை - ஜி.கே.வாசன் காட்டம்..

 
gk vasan

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க முடியாமல் போனது அரசின் இயலாமையைக் காட்டுவதாக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற  கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.  அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொரோனா காலகட்டத்தில் இருந்த மின் கட்டண உயர்வைவிட தற்போதைய மின் கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்துக்களை விமர்சித்த ஆ ராசாவின் கருத்து ஏற்புடையதல்ல.  போதைப் பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு தடுக்க முடியாதது அதன்  இயலாமையைக் காட்டுகிறது. துறைமுகங்கள் வழியாக போதை பொருள் ஊடுருவதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பண்டிகை காலங்களில் கண்மூடித்தனமான ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

drugs

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நோக்கம் தமிழக மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதுதான். வெற்றி, தோல்வியைத் தாண்டி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தாண்டி தமிழக மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை எதிரொலிக்க கூடிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டும். சிறிய, பெரிய கட்சிகளைத் தாண்டி மரியாதைக்குரிய கட்சி என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான். தனித்து தங்களுடைய பணிகளை செய்து எங்களுடைய பலத்தை ஒவ்வொரு இடத்திலும் காட்டிக் கொண்டிருக்கிறோம். வெற்றி, தோல்விகளைத் தாண்டி கூட்டணியைத் தாண்டி பயணித்து கொண்டு இருக்கிறோம்.

ஜிகே வாசன்

நாடாளுமன்ற தேர்தலைப் பொருத்தவரை தற்போதைய ஆட்சியாளருடைய செயல்பாடுகளில் நிறைய குறைகள் இருக்கிறது. குறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு என பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறது. எதிர்மறை வாக்கு எங்களைப் போன்ற எதிரணி அதிகப்படியான வாக்குகளை வெல்லக்கூடிய வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சிக்கு தான் பிரயோஜனமாக இருக்குமே தவிர நாட்டுக்கு பிரயோஜனமாக இருக்காது” என்று தெரிவித்தார்.