மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பை அகற்றும் செயல்.. - ஹைகோர்ட் கிளை காட்டம்..

 
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

 மாற்று இடம் வழங்கிய பின்னர் ஆக்கிரமிப்புகளை அவற்றுவது என்பது, ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயல் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.  

ஆக்கிரமிப்பு அகற்றம்

கன்னியாகுமரியைச்  சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கன்னியாகுமரி  மாவட்டம் குளத்தூரில் உள்ள பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார்.  இந்த வழக்கு   உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி அமர்வு முன்பாக  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால் தமிழகத்தில் சூழலியல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.  மேலும்,  சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.  

மதுரைக்கிளை

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முழுமையாக அகற்றப்படாதது ஆச்சரியமளிக்கிறது எனவும்,  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும் கூறினர்.   நீர் நிலையங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடைபெறாது என்று சுட்டிகாட்டிய நீதிபதிகள்,   நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.  மாற்று இடம் தந்த பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் குறிப்பிட்டனர்.  நீதிமன்ற உத்தரவுக்கு பின் எவ்வித மாற்று ஏற்பாடுமின்றி விரைவாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை எனவும்,  பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  நீதிபதிகல் காட்டமாக தெரிவித்தனர்.