"குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" - வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

 
rain

மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

rain

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன்  இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை , கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

rain

இந்நிலையில் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கோவை, திருப்பூர் ,திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்றும், நாளையும் ,அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி ,கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், |இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.