சென்னையில் வெள்ளத்தில் இறங்கி மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

 
eps

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

eps

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். முதலில் மணப்பாக்கம் திருவள்ளுவர் நகரில் தொடங்கினார். மெயின் ரோட்டில் இறங்கி தெருக்களுக்குள் சென்றபோது முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார். அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.