தவளைகளைக் கண்டால் இதை செய்யுங்கள்.. - இயற்கை ஆர்வலர்கள் சங்கம் கோரிக்கை..

 
தவளை


தவளைகளைக் கண்டால் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு இயற்கை ஆர்வலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

பறவைகள் கணக்கெடுப்பு, புலி கணக்கெடுப்பு என வனத்துறையினரும், இயற்கை ஆர்வலர்களும் நடத்துவதை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது சென்னையை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தவளை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர். மேலும் தவளையின் கூக்குரல்களை காது கொடுத்து கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னையை தளமாக கொண்டு 44 வருடங்களாக செயல்பட்டு வரும் மெட்ராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (எம்.என்.எஸ்.) இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. இதுகுறித்து எம்.என்.எஸ் கவுரவ செயலாளர் விஜய் குமார் கூறுகையில், தவளைகள் நீரியல் ஆரோக்கியம் மற்றும் வாழ்விடத் தரத்தின் அதிக உணர்திறன் கொண்ட உயிர் குறிகாட்டிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தவளை

 இவை வேட்டையாடப்படும் இரையாக இருப்பதால் அவை இல்லாதது முழு சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மாற்றும். தவளைகளின் இருப்பு, இல்லாமை மற்றும் நமது சுற்றுப்புறங்களில் அவற்றின் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் வாழிடங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற இந்த கணக்கெடுப்பு உதவும் என்றார். இந்த மாதமும், அடுத்த மாதமும் தவளைகளின் சத்தம் கேட்டால் அவற்றை படம் எடுத்து அனுப்புமாறும், பழைய தரவுகளை பதிவேற்றுவதை தவிர்க்குமாறு பங்களிப்பாளர்களை இந்த சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தவளைகளின் இருப்பு, இல்லாமை, அவைகளின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றை நன்றாக புரிந்து கொள்ள உதவும் பல்வேறு தகவல்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம் என குமார் கூறினார்.

தவளை

 இயற்கை ஆர்வலர் யுவன் கூறுகையில், தவளைகளுக்கு தோல் சுவாசம் உள்ளது. அதாவது அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன. எனவே அவை அதிக உணர் திறன் கொண்டவை. ஒரு நீர்ப்பிடிப்பு பகுதியின் ஆரோக்கியம் அல்லது அப்பகுதியின் நீரியல் தவளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஏனெனில் அவை உயிரியல் கண்காணிப்பாளர்கள். அவை பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களாகவும் செயல்படுகின்றன. ஒட்டுமொத்தமாக அவற்றின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சில இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டது என்று கூறினார்.