மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த 217 கழிவுநீர் குழாய்கள் துண்டிப்பு
சென்னையில் மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த 217 கழிவுநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2 , 071 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய்கள் உள்ள நிலையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவற்றில் பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நாட்களில் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதுபோன்ற இணைப்புகளை துண்டித்து அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியின் உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டடங்களில் , குடியிருப்புகளுக்கு ரூ.5,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.10,000/-மும், சிறப்பு கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.25,000/ மும், வணிக வளாகங்களுக்கு ரூ.50,000/-மும்,அடுக்குமாடி கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1,00,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.200,000/-மும் அபராதமும் விதிக்கப்படுகிறது். இந்நிலையில், கடந்த மாதம் சென்னையில் மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த 217 கழிவுநீர் குழாய்களை துண்டித்துள்ளதோடு, 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.