பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு எதிரான வழக்கு ரத்து

 
anbumani

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது விதிமுறைகளை மீறி பிரச்சார சிடி விநியோகித்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையின் போது "சொந்தங்களே சிந்திப்பீர்" என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சார சிடி தயாரித்து விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீது தருமபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு, அன்புமணி ராமதாஸ் நேரடியாக சிடி-யை வழங்கவில்லை எனவும் அவரது பெயர் தவறுதலாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

high court

இந்நிலையில் இந்த வழக்கில் இன்றைய உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, அன்புமணி தரப்பு வாதத்தை ஏற்று அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.