சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல், சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின் படி சேவல் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேவல்களை துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.