இந்தி இல்லாமல் வாழ முடியுமா? இது முதல்வர் காதிலும் ஒலிக்கும் - டி.ராஜேந்தர் பரபரப்பு
இந்தி இல்லாமல் வாழ முடியுமா என்று கேட்கிறார் பிரபல திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தர். ரூபாய் நோட்டில் கூட இந்தி இருக்கிறது. ரயிலில் இந்தியில் எழுதி இருப்பதால் அதில் போகாமல் இருக்கிறோமா என்றும் அவர் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தமிழ்நாடு முதலமைச்சர் காதிலும் ஒலிக்கும் என்று நம்புகிறேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இயக்குநரும் இசையமைப்பாளருமான டி. ராஜேந்தர், ’வந்தே வந்தே மாதரம்’ என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழியில் இந்த இசை ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார். சென்னை தி. நகரில் உள்ள தனியார் விடுதியில் இந்த இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. அதில் பேசிய டி. ராஜேந்தர் திராவிட மொழிகளுக்கு தாய்மொழி தமிழ் தான். அது தொன்மையான மொழி. அது தாயைப் போன்றது என்று கூறி இருக்கும் டி, ராஜேந்தர், மதம் சார்ந்து நிறைய பாடல்களை பாடி இருக்கிறேன். இந்தி என்று சொன்னால் அதில் சமஸ்கிருதமும் கலந்து இருக்கும் என்றவர்,
ரூபாய் நோட்டில் கூட அனைத்து மொழிகளும் இருக்கின்றன. ரயிலில் இந்தியில் எழுதி இருக்கிறது. அதற்காக அதில் நாம் போகாமல் இருக்கிறோமா? நாம் இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டெல்லியில் இந்தி பேசுகிறார்கள். நான் என் தாய்மொழி தமிழ் என்றாலும் அனைத்து மொழிகளிலும் பேசுகிறேன் என்கிறார்.
கே. ஜி. எஃப் , ஆர். ஆர்.ஆர், காந்தாரா போன்ற படங்கள் இந்திக்குப் போகும்போது நானும் எனது பேரனை இந்திக்கு கொண்டு செல்ல இருக்கிறேன். கலைஞர் ஆட்சி காலத்திலேயே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் இந்தியில் பாடல் பாடினேன். நான் இந்தியில் இந்த தாய் நாட்டுக்காக தமிழ் தேசத்துக்காக ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறேன். அதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றவர்,
பாரத மாதா கி ஜே என்று சொன்னால் பாஜக என்று சொல்கிறார்கள். அதற்காக ஜெய்ஹிந்த் என்று சொன்னால் காங்கிரஸ் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்டிருக்கும் ராஜேந்தர், பிரதமர் வேறு கட்சியாக இருக்கிறார். ஆனால் வாஜ்பாய் காலத்தில் இருந்து எனக்கு இந்தி தெரியும் என்று என் தொடர்ந்து இந்தி புகழ் பாடி இருக்கிறார் டி. ராஜேந்தர்.
இந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் வலுத்து வரும் நிலையில் இந்திக்கு ஆதரவாக டி. ராஜேந்தர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.