திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் - டிடிவி தினகரன் பேட்டி

 
ttv

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  அ.தி.மு.க. கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க. பற்றி பேசுவது தேவையற்றது, தேர்தல் சமயத்தில் பேசி கொள்ளலாம், சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும். தி.மு.க. ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும்.

TTV STALIN

தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க. விடியல் ஆட்சியின் அவலங்கள். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது.   மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ. 3,000 வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.