அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..
அதிமுக செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக 74 பேர் நியமனம் செய்யப்பட்டனர். அதனையடுத்து இன்று அ.தி.மு.க. செயற்குழுவில் 80 பெண்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, செல்வி ராமஜெயம், ராஜலட்சுமி, மகளிர் இணை செயலாளர் சக்தி கோதண்டம், துணை செயலாளர்கள் சகுந்தலா, கலைச்செல்வி, அழகு தமிழ்ச்செல்வி, நூர்ஜகான், மணிமேகலை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மரகதம் குமரவேல், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் ராஜலட்சுமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்துப் பதவிகளுக்குமான அதிமுக உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளதை அடுத்து, வருகிற மே மாதம் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டதில் அதிமுக ஒற்றை தலைமை மற்றும் சசிகலா விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம். 🌱✌🏻#அதிமுக 1(2) pic.twitter.com/mR60lvo2PJ
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) April 29, 2022