கிசான் முறைகேடு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.78 லட்சம் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு துவக்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. லட்சக்கணக்கில் பணம் கையாடல் நடந்துள்ளதை அறிந்த அரசு, முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி, எல்லா மாவட்ட ஆட்சியர்களும் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இதுவரை கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேறு மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.