அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 61 பேர் காயம்..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 61 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை, காலை 8 மணிக்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண ஏராளமான பொதுமக்கள் அவனியாபுரத்தில் குவிந்திருந்தனர். காலையில் தொடங்கி தொடர்ந்து 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, சரியாக மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த விஜய்க்கு காரும், 2ம் இடம் பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக்கும், 3ம் இடம் பிடித்த பாலாஜி என்பவருக்கு பால் மாடும் பரிசாக வழங்கப்பட்டது.
ஒருபுறம் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டினாலும், மாடு மிதித்தும், மாடுகள் முட்டியும் பலர் காயமடைந்தனர்11 சுற்றுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 61 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 26 மாடுபிடி வீரர்களும், மாட்டு உரிமையாளர்கள் 24 பேர் மற்றும் பார்வையாளர்கள் 11 பேர் என மொத்தம் 61 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். காயமடைந்த 61 பேரில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.