கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதமன் ஆகிய 6 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.